இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமனநிலையத்துக்கு வந்தடைந்தார்.
அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் இன்று காலை 10.30மணியளவில் ஏப்ரல் 21திகதி பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு விஜயம் செய்து தார். அவரை கொழும்பு பேராயர் மல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவர்கள் வரவேற்றார்.
பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை அவர்கள் சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார் அதன் பின் குண்டுத்தாக்குதலின் சிதைவுகளை பார்வையிட்டு குண்டு தாக்குதலில் உயிர் தியாகம் செய்த மக்களின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை அவர்கள் குண்டுத்தாக்குதல் செய்தியை கேட்டு தாம் பெரும் அதிர்ச்சி அடைந்ததாகவும் சொல்லமுடியாத வேதனைக்கு தாம் ஆளானதாகவும் அன்றயதினம் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்க கிடைத்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
குண்டுத்தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு நிவாரணப்பொதிகளும் பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பிற்பகல் இரண்டு மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ள அவர் அதனையடுத்து கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவையும் சந்திக்கவுள்ளார்.
பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை அவர்கள் நாளை மறுதினம் 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.