கொழும்பு- சிலாப வீதியில் நீர்கொழும்பு தெல்வத்த சந்தியில் நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணியளவில் பயணக்களைப்பில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சாரதி ஒருவரை ஆயுதம் ஒன்றைக்காட்டி மிரட்டி HILUX ரக வாகனம் ஒன்றை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் ஒருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்து வாகனத்தை மீட்டுள்ளனர்.
தன்கொடுவ ஜெயந்தி எஸ்ப்போர்ட் தேங்காய் தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான வாகனம் ஒன்றே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த கலன குஷாந்த என்ற 26 வயது இளைஞர் ஒருவரே வாகனத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பில் கொள்ளையிட்ட வாகனத்தை சந்தேகநபர் இரத்மலானைக்கு கொண்டு சென்று இலக்கத்தகடுகளை கழட்டி வீட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து கண்டி பன்வில பிரதேசத்துக்கு கொண்டு சென்று வாகனத்தை சிறு மாற்றங்கள் செய்துள்ளார்.
வீட்டில் இருந்த இலக்கத்தகடுகளை சந்தேகநபரின் தாயார் இரத்மலானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தநிலையில் துரிதமாக செயற்பட நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகநபரை கண்டி பன்வில பிரதேசத்தில் கைது செய்து வாகனத்தை மீட்டுள்ளனர்.
பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
சந்தேகநபர் இன்றயதினம் நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.