பரபரப்பான அரசியல் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று கூடவுள்ளது. இதன்போது கட்சிகளின் முக்கிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு குழு அலரிமாளிகையில் கூடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பு செய்வது குறித்து உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின்னர் கட்சியில் மறுசீரமைப்பினை செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தது.
இதனையடுத்து நம்பிக்கையில்லாப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டதனை அடுத்து கடந்த சனிக்கிழமை கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்ற குழுக் கூட்டமும் கூடின. இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்து பரவலாக கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பினை சுயாதீனமாக செய்ய வேண்டும் என்றும் செயற்குழுவில் பிரதமருக்கு ஆதரவானவர்கள் அதிகம் இருப்பதனால் மறுசீரமைப்பு குழுவினை பாராளுமன்ற குழுவே தீர்மானிக்க வேண்டும் என்றும் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதனையடுத்து பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மறுசீரமைப்பு குழுவுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். குறித்த குழுவில் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவும் உப தலைவர் ரவி கருணாநாயக்கவும் தானாக குழுவில் அங்கம் வகிக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
மறுசீரமைப்பு குழுவிற்கு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஹரீன் பெர்னாண்டோ, ருவன் விஜேவர்தன, அகிலவிராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர, எரான் விக்கிரமரட்ன, அசோக பிரியந்த மற்றும் நளின் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த செயற்குழு கூட்டத்தின் போது பொதுச்செயலாளர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை பெரும்பாலானோர் பரிந்துரை செய்துள்ளனர். அத்தோடு கல்வி அமைச்சரும் தற்போதைய பிரதி பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரியவசமின் பெயரையும் ஒரு சிலர் பரிந்துரை செய்துள்ளனர். அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரது மகன் சதுர சேனாரத்னவும் இணையவுள் ளனர். இந் நிலையில் கட்சியின் தவிசாளர், பொதுச் செயலாளர், தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக் கப்படவுள்ளனர்.
பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அலரி மாளிகையில் கூடவுள் ளமை குறிப்பிடத்தக்கது.