முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமையானது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜனநாயக மற்றும் சட்டபூர்வமான சம்பிரதாயங்களை மீறி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைதுசெய்யும்போது பின்பற்றவேண்டிய சம்பிரதாயமான, சபாநாயகருக்கு தெளிவுபடுத்தும் முறைமை மீறப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவுறுத்தப்பட்ட வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்தமைக்கான நியாயமான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நலன் விசாரிப்பதற்காக இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
இதனிடையே, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிரோஷா அத்துகோரல இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியின் மனைவியிடமும், அவரின் குழந்தையிடமும் இரவு வேளையில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்க்காக காவல்துறையினர் முயற்சித்துள்ளனர்.
இதன்மூலம் அவர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிரோஷா அத்துகொரல அந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.