ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைச்சாத்திட்ட இணக்கப்பாட்டு உடன்படிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும், மொட்டு சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகள் சிலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த விடயம் உட்பட எதிர்வரும் பொதுத் தேர்தல் உள்ளிட்ட விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுடன் இன்று ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய கூட்டணி தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக புதிய கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடடமைப்பின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.