பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடந்த 2019.08.20ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தமை தொடர்பாக பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.
பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரின் கோரிக்கையின் பேரிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றதுடன், இந்தியாவினால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 370 நீக்கப்பட்டமை மற்றும் சட்டப் பிரிவு 35A இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான அண்மைய அபிவிருத்திகள் குறித்து பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார்.
பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரின் கருத்துக்களை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் மிகவும் நெருங்கிய நட்புறவை பேணி வருவதாகவும், பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு மேம்படுவதே இலங்கையின் விருப்பமாகும் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி அவர்களின் அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அந்த கலந்துரையாடல் இடம்பெற்றது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.